செவ்வாய், 1 டிசம்பர், 2009

தமிழிசைக் கலைக் களஞ்சியம் வெளியிடப் பட்டுள்ளது


தமிழிசை வரலாற்றில் போற்றப்படும் நிலையில் அரிய கருவூலமாகத் திகழும் தமிழிசைக் கலைக் களஞ்சியம் வெளியிடப் பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக் கழக வெளியீடாக வந்துள்ள இந்நூல் தமிழிசை தொடர்பான பன்னூற்றுக் கணக்கான ஐயங்களுக்கு சொற்களஞ்சியங்கள் வாயிலாக தெளிவான விளக்கம் தருகின்றது. தமிழிசை அறிஞர் முனைவர் வீ.ப.கா.சுந்தரம் அவர்களால் நுண்மாண் நுழைபுல அறிவு கொண்டு ஆய்ந்தமைக்கப் பெற்ற இக்கலைக் களஞ்சியம் தமிழிசை பேணும் உணர்வாளர்கள் ஒவ்வொருவராலும் படித்துப் பேணப்பட வேண்டிய ஆன்ற கருவூலமாகும். இதன் விலை மலேசிய வெள்ளி 200 ( நான்கு தொகுப்பு )


தமிழிசைக் கலைக்களஞ்சியத்தின் பயன்பாடு.

இசை கற்போர்க்கு

இந்நூலில் இன்று நடைமுறையில் வழங்கி வருங்கின்ற இசைக்கலைக் கருத்துகளும், பண்டைக் காலத் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களில் வழங்கி வந்த இசைக்கலைக் கருத்துகளும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இசைக்கலையே அன்றி நாட்டியம்,நடனம், நாடகம், சிற்றூர்களின் ஆடல் பாடல், இசைக் கருவிகள், தாள வகைகள் முழவு கொட்டும் முறைகள்முதலியவைகளும் விளக்கப்பட்டுள்ள, கிருதி, கீர்த்தனை, கீதம், வர்ணம், பதம், தில்லானா, சாவளி, இராகம், தானம், பல்லவி என்பவை பற்றிய தக்க விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இசைநூல் இயற்றியோர் வரலாறுகள் இடம் பெற்றுள்ளன. பாடுதுறை வல்லுநர்களைப் பற்றிய செய்திகள் நூலின் இறுதியில் தொகுத்துரைக்கப் பட்டுள்ளது.

இலக்கியம் கற்போர்க்கு

இந்த நூற்றாண்டில் மொழியியல் துறையைத் தமிழ் அறிஞர்கள் கற்றுத் தேர்ந்த போதுதான், தொல்காப்பியத்தில் மொழியியல் கூறுகள் பலவும் காணப்படுகின்றன என்று அவர்களால் கண்டு பிடிக்க முடிந்தது. இதுபோலவே இந்தக் கலைக் களஞ்சியத்தால் தொல்கப்பியத்தில் ஆங்காங்கு காணப்படும் இசையியல் கூறுபாடுகள் பலவற்றைக் கண்டுபிடித்துக் காட்டமுடிந்தது. தென்னக இசையியல் தொல்காப்பியத்தில் தொடங்குதல் வேண்டும் என்று வற்புறுத்திக் காட்டுகின்றது. ஐந்து நிலப் பெரும் பண்களைத் தொல்கப்பியம் சுட்டிக் காட்டுகின்றது. பத்துப்பாட்டும், எட்டுத் தொகையும் அப்பெரும் பண்களின் ஆரோகணம் அவரொகணம் ஆகிய இரண்டையும் கண்டுபிடிக்கும் முறைகளையும் விரிவாக விளக்கியுள்ளது. தேவார திவ்ய பிரபந்த நூல்கள் அப்பண்களில் பாடல்களை இயற்றிக் காட்டியுள்ளன. தாளக் கட்டுமானங்களும் இவ்வாறே தொல்காப்பியத்தில் தொடங்கி வளர்ந்து வந்துள்ளதைத் தாள அறிவு கொண்டு கண்டு களிக்கலாகும்.

சிலப்பதிகாரம் - இசைக் கலங்கரை விளக்கம்

சிலப்பதிகாரத்தில் உள்ள இசை நுணுக்கங்களையும் மாட்சிமைகளையும் விளக்கிக் காட்டப் பல நூல்களும் உரைகளும் உதவுகின்றனபஞ்சமரபு வெண்பாக்களின் மூலமாகவும், அரும்பதவுரையாசிரியர், அடியார்க்கு நல்லார் உரைகளின் மூலமாகவும் சிலப்பதிகார இசைத்தொடர்கள் விளக்கப்பட்டுள்ளன . சிலப்பதிகாரத்தில் இசைக் குறிப்புகள் நிரம்பிய பகுதிகள் - ஆய்ச்சியர் குரவை, அரங்கேற்று காதை, கானல்வரி,வேனிற்காதை, கடலாடுகாதை , புரஞ்சேரியிருத்த காதலிமுதலியன . இவற்றைப் பன்னெடும் காலமாகக் கல்வி நிலயங்களில் பாடத்திட்டத்தில் சேர்ப்பதில்லை, கற்பிப்பதில்லை. இக்கலைக் களஞ்சியத்தை முயன்று கற்போர் சிலப்பதிகார இசை மாட்சியை இனிது விளங்கிக் கொள்ளலாம் . பண்டைய ஏழ்பெரும் பாலைகட்குரிய இன்றைய இராகங்கள் ஆய்ந்து கூறப்பட்டிருப்பதால் பழம் பாலைகளைப் பாடிக்காட்டலாம் , சிலப்பதிகாரம் என்னும் பெருங் கலங்கரை விளக்கத்தின் துணைக்கொண்டு அதற்கு முன்னர்த் தோன்றிய நூல்களிலும் பின்னர்த் தோன்றிய நூல்களிலும் காணப்படும் இசைக் குறிப்புக்கள் யாவற்றையும் கண்டு அறிந்துக்கொள்ளலாம் . பத்துப்பாட்டிலும் எட்டுத் தொகையிலும் காணப்படும் இசைக் குறிப்புக்கள் சிலப்பதிகாரக் குறிப்புகளுடன் ஆங்காங்கு ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன .

விளக்கும் முறைகள்

நூல் முழுவதிலும் ஆங்காங்குக் கட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளன . இவற்றின் மூலமாகச் செயல்படுத்திக் காட்டி இசை இலக்கணங்கள் விளக்கப்பட்டுள்ளன . ௧௨ தான நரம்புகளை நிறுத்திப் புதிய பன்னுண்டாக்கும் பண்ணுப் பெயர்ப்பு முறைகள் விளக்கப்பட்டுள்ளன . இணை, கிளை, நட்பு, பகை என்னும் நரம்புகளைக் கண்டுபிடித்துக்கொள்ளும் முறைகள் செயல்படுத்திக் காட்டப் பட்டுள்ளன . வட்டப் பாலைகள் நேர் கட்டகங்களில் பண்ணுப் பெயர்த்து நிறுவப்பட்டுள்ளன. இவ்வாறு ஆழமான இசை அமைப்புக்களையும், நரம்பு தொடுத்துப் பாடும் நெறிகளையும் கட்டகங்களில் செயல்படுத்தி விளக்குவதன் மூலம் தெளிவையும் திட்டத்தையும் இந்நூல் ஊட்ட முயன்றுள்ளது .

ஏழ்பெரும் பாலைகளுள் முல்லையாழ் (பெரும்பண்)

தமிழகத்தின் தொன்மைக் காலத்தில் ஏழ்பெரும் பாலைகட்கும் தலைமையாக நின்றும், ஆதி அடிப்படைப் பாலையாக நின்றும் விளங்கியது செம்பாலை. இது சங்க இலக்கியக் காலத்தில் முல்லை யாழ் (பெரும்பண்) எனப் பெயர்ப் பெற்றது . தலைமைச் சிறப்புக் கருதிப் 'பாலையாழ்' என்றும் குறிக்கப்பட்டது . பின்னர்ச் செம்பாலை எனப் பெயர்ப் பெற்றது . தலைமைச் சிறப்புக் கருதிப் ' பாலையாழ்' என்றும் குறிக்கப்பட்டுள்ளது.













ஞாயிறு, 8 நவம்பர், 2009

நாட்டைக் குறிஞ்சி தமிழ்ப்பண் பற்றிய விளக்கம் - சாருலத்தா மணி

நாட்டைக் குறிஞ்சி தமிழ்ப்பண் பற்றிய விளக்கம் -
சாருலத்தா மணி

தமிழ்கூறு நல்லுலகில் தமிழிசை தொடர்பாக இதோ ஒரு புதிய வலைப்பூ.


தமிழ்கூறு நல்லுலகில் தமிழிசை தொடர்பாக இதோ ஒரு புதிய வலைப்பூ.

முரல்(சுரம், பண், மெட்டு, தாளம் என்னும் நாற்கூறு கொண்ட இன்னிசை முழுவளர்ச்சி யடைந்திருந்தது.

பண் (எழுமுரல்), பண்ணியல் (அறுமுரல் ), திறம் (ஐம்முரல் ), திறத்திறம் (நான்முரல்) என நால் வகைப்பட்ட பண்கள் நரப்படைவால் 11,991 ஆகக் கணிக்கப்பட்டிருந்தன. ஆயப்பாலை, வட்டப்பாலை, சதுரப்பாலை, முக்கோணப்பாலை (திரிகோணப்பாலை) என்னும் நால்வகை முறையில் எழுபெரும்பாலைகளும் அவற்றின் கிளைகளும் திரிக்கப் பட்டன. அத்திரிவு முறைகள், முறையே முழுமுரல், அரைமுரல், கால் முரல், அரைக்கால் முரல் ஆகிய முரல் நிலைகளைத் தழுவியன என்பர். இந்நுட்பங்கள் இற்றை இசைவாணர்க்குத் தெரியாவாறு, ஆரியத்தால் மறையுண்டு போயின.

தோல் துளை நரம்பு உறை (கஞ்சம்) என்னும் நால்வகை இசைக் கருவிகளுள் சிறந்தது யாழ் என்னும் வீணை. யாழ்களுட் சிறந்தது செங்கோட்டியாழ். அதன் வழியினதே இற்றை வீணை. விண்ணெனல் = நரம்பு தெறித்தல். விண் - வீணை. தோலிற் சிறந்தது மத்தளம் (பெரியது) அல்லது மதங்கம் (மிருதங்கம்). துளையிற் சிறந்தது புல்லாங்குழல்.

மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாணர்

இத்தகு சீர்மையும் சிறப்பும் தொன்மையும் வாய்ந்த நம் இனத்தின் மொழியின் பெருமையை உணர்த்தும் தமிழிசை பற்றிய அரிய செய்திகளை இவ்வலைப்பூ வாயிலாக நாம் தெரிந்து கொள்வோமாக. தொடர்ந்து பாருங்கள்.

அன்பன்

இரா.திருமாவளவன்.